Pages

Thursday, March 11, 2021

மகா சிவராத்திரி

 

மகா சிவராத்திரி 2021 🙏



சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என்று பொருள். சிவபெருமான் தன்னை வணங்குபவர்களின் மனதில் இருக்கும் தீய எண்ணக் கழிவுகளான காமம், கோபம், குரோதம், பேராசை, பொறாமை போன்ற கர்ம வினைக் கழிவுகளை அழிப்பவர். அவரை வழிபடுபவர்களின் வாழ்வில் நிலவும் நோய்கள், மனக் கவலைகள், வறுமை நிலை போன்றவற்றை அறவே அழிப்பவர். ஒருவர் தனது மூன்று பிறவியில் செய்த பாவங் களையும் அழிப்பவர் சிவபெருமான்.

உலகம் முழுவதும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்ட காலத்தில், அன்னை பார்வதி உலக உயிர்களுக்காக தவம் இருந்து இறைவனை பூஜித்தார். அந்த இரவே சிவராத்திரி நாளாகும். 

பார்வதிதேவி தவமிருந்து, சிவ பெருமானின் இடப்பாகத்தில் இடம் பெற்றது சிவராத்திரி தினமாகும். உமாதேவி சிவபெருமானிடம் ஆகம உபதேசம் பெற்றதும் சிவராத்திரி அன்றுதான்.

மகா சிவராத்திரி அன்று 4 கால பூஜை என்பது விசேஷம். 

அந்த நான்கு ஜாமம் என்பது மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலகட்டமாகும். 

சிவ ஆலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் பங்கேற்றால் சகல தோஷங்களும் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.

மகாசிவராத்திரி அன்று பல மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகங்கள் செய்ய முடியாதவர்கள், தண்ணீரையும், வில்வ இலையையும் சர்வேஸ்வரனுக்கு சமர்பித்து, வெல்லம், பச்சரிசியையும் நெய்வேதியமாக படைத்து வணங்கி, ஓம் நமசிவாய - ஹர ஹர மஹாதேவ என்ற மந்திரத்தை உச்சரித்தாலே சகல நன்மைகளும் தருவார் சிவபெருமான் என்பது நம்பிக்கை.

பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் தவம் செய்து, சிவபெருமானிடம் இருந்து 'பாசுபதம்' என்னும் அஸ்திரத்தை பெற்றதும் இந்த சிவராத்திரி தினமே. மார்க்கண்டேயனுக்காக, எமதர்மனையே சிவபெருமான் சம்ஹாரம் செய்த நாள் மகாசிவராத்திரி. பகீரதன் ஒற்றைக் காலில் கடுந்தவம் புரிந்து, கங்கையை பூமிக்குக் கொண்டு வந்ததும் சிவராத்திரி தினத்தில்தான்.

கண்ணப்ப நாயனார், குருதி வடியும் லிங்க வடிவிலிருந்த ஈசனின் கண் மீது தன் கண்களைப் பொருத்தி முக்தி அடைந்ததும் மகாசிவராத்திரி நாளில்தான். பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும், லிங்க ரூபமாக சிவபெருமானின் அருள் வழங்கிய நாள் மகா சிவராத்திரி.


மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன், சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. முழுமையாக விரதம் கடைப்பிடித்தால் தீராத நோய்களும் தீரும். சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.

ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அதோடு அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வாழ்வில் செல்வம் வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர், மார்ச் 11ஆம் தேதி மகா சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.







No comments:

Post a Comment